கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் – மன்னிப்புச் சபை

207 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்கள் சிறிதளவே வெளியாகின்றன எனத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அனைவருக்கும் நியாயமான முறையில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பலவீனமான நிலையில் உள்ள மக்கள் தடுப்பூசி வழங்கப்படுவதிலிருந்து விலக்கிவைக்கப்படும் நிலை உருவாவதற்கு தென்னாசிய அரசாங்கங்கள் அனுமதிக்க கூடாது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்கள் சிறிதளவே வெளியாகின்றன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா, இது தடுப்பூசியை பெற முயலும் மக்களிற்கு தடையாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் குறித்த எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் தடுப்பூசிக்கான பெரும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக தேசிய அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு சர்வதேச சமூகம் உதவவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.