‘ஆட்சியாளர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாதீர்’

309 0
சிறுபான்மை சமூகமாகிய நாம் கன்னியமாகவும் கௌரவமாகவும் வாழ வேண்டுமானால், தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனேயே இணைந்து வாழ வேண்டும் எனத் தெரிவித்த அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தக் கூடாதெனவும் கேட்டுக்கொண்டார்.

கிண்ணியாவில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கோட்டாபய, மஹிந்த, பசில் போன்ற நல்ல தலைவர்களைக் காண முடியாது. அவர்கள், நாட்டை திறம்பட அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றார்கள்.

“அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர், கன்னியமாக வாழ வேண்டுமானால் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என்று எங்களிடம் கூறிவிட்டுச் சென்றார்.

“கல்வி மற்றும் மார்க்கத்தில் அக்கறை கொண்ட நாங்கள், ஒரு சிலரின்  இனவாதப்  பேச்சுகளுக்கு ஏமாறக்கூடாது. சமூகத்திலிருந்து இனவாதம், மதவாதம் ஒழிய வேண்டும்.

“உலகின் பாரிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக்கூடிய வளமான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைமைகளுடன் இருந்தால்தான் எம்மால் நிம்மதியாக வாழ முடியும்” என்றார்.