சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு எதிராக இன்று முதல் விசேட நடவடிக்கை!

230 0

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பின்னர் பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஒரு சிறப்பு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குறித்த சுற்றறிக்கையின் கீழ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சிறப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடைகள், பொது போக்குவரத்து மற்றும் ஏனைய இடங்களை ஆய்வு செய்ய பொலிஸார் பணியில் அமர்த்தப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக மீறப்படுவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும் சமூக தூரத்தை பராமரிக்கவில்லை என்றும் அவர் சாடினார்.

ஹோட்டல் மற்றும் ஏனைய நிறுவனங்கள் சுகாதார வழிகாட்டுதல்களை நெருக்கமாக பின்பற்றவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதன் விளைவாகவே பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க சிறப்பு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.