உயிரிழந்த நபர் பிணவறையில் உயிர்த்தெழுந்துள்ளார்? நீர்கொழும்பில் சம்பவம்

227 0

உயிரிழந்த நபரொருவர் பிணவறையில் உயிர்த்து எழுந்த சம்பவமொன்று இன்றைய தினம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.

40 வயதான மீனவர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உடல் பிணவறைக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலத்தை பார்வையிடுவதற்கு அவரது உறவினர்கள் பிணவறைக்கு சென்ற போது அவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபர் மீளவும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவர்களினால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடலில் சீனியின் அளவு மிகவும் குறைந்த காரணத்தினால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் இதனால் அவர் இறந்து விட்டதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்த மருத்துவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையோ பொலிஸ் நிலையமோ இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.