மணிவண்ணனிடம் தீவிர விசாரணை- சகோதரனைச் சந்திக்க மட்டும் அனுமதிக்கப்பட்டது

260 0

யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிவண்ணன், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் வவுனியா போது வைத்தியசாலைக்கு அழைத்து்ச செல்லப்பட்ட அவரிடம் சட்ட வைத்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், அவரைச் சந்திப்பதற்காக வவுனியா சட்டத்தரணிகள் சிலர், மணிவண்ணன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு முன்பு கூடியிருந்தனர்.

எனினும், அவர்களுக்கு அனுமதிக்கப்படாத போதும், மணிவன்ணனின் சகோதரனும் சட்டத்தரணியுமான வி.திருக்குமரனுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை, மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கணினி உட்பட்ட சில பொருட்களும் குறித்த பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பில் இருந்தும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் வருகைதந்து விசாரணை செய்யவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.