வவுனியாவில் குடும்ப விபரங்களைத் திரட்டும் காவல்துறையினர்! அச்சத்தில் பொதுமக்கள்

181 0

வவுனியா பூந்தோட்டம் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை திரட்டும் படிவம் ஒன்றினை வழங்கிவிட்டு சென்றதுடன் இரு தினங்களில் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வருகை தருவதாகவும் குடும்ப விபரங்களில் உள்ளடக்கப்பட்ட விபரங்களை வழங்குமாறும் கோரிவிட்டு சென்றுள்ளனர் .

எவ்விதமாக தெளிவுபடுத்தும் அறிவுறுத்தல்கள் மற்றும் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இவ்வாறு குடும்ப விபரங்களை கோருவதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

நேற்று முதல் பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் சென்ற காவல்துறையினர் வீடுகளின் வசிப்பவர்களின் பெயர், முகவரி, தொழில், தேசிய அடையாள அட்டையின் இலக்கம், தொலைபேசி இலக்கம் போன்ற முக்கிய தகவல்களை கோரிய விண்ணப்பப்படிவம் ஒன்றினை வழங்கி வருவதுடன் அவ்விபரங்களை சேகரிப்பதற்கு மீண்டும் வருகை தரவுள்ளதாகவும் அப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை நிரப்பி கையளிக்குமாறு அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு காவல்துறையினரால் குடும்ப விபரங்கள் சேகரிப்பதற்கு காரணங்கள் தெரியாமல் மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.