யாழ் நகரில் தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி

206 0

யாழ் நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை திறக்க அனுமதிப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.மகேசன் அறிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி முதல் யாழ் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கடந்த 14 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று அவசரமாக கூடிய யாழ் மாவட்ட கொவிட் தொற்று ஒழிப்பு செயலணியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தற்போது பண்டிகை காலம் என்பதால் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு யாழ் நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.