’தமிழர்களுக்கு ஏன் இதுவரையில் நீதி விசாரணை கோரவில்லை?

233 0

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஏன் இதுவரையில் நீதி விசாரணை ஒன்றைக் கோரவில்லை எனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், சிங்கள கிறிஸ்தவர்களுக்காக மாத்திரம்தான் கார்டினல் குரல் கொடுக்கிறாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கீழ்த்தரமாக விமர்சித்திருந்ததாகவும் மதமொன்றின் தலைவராக இருந்துகொண்டு கார்டினலால் உதிர்க்கப்படும் வார்த்தைகள், பலரது புருவங்களை உயர்த்திப் பார்க்குமளவுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்குத் தமிழர்கள் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்திருந்த இராயப்பு ஜோசப் ஆயருக்கு, கார்டினல் எதிர்வினை ஆற்றியிருந்ததாகவும் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான நீதி விசாரணை வேண்டுமென ஏன் கார்டினல் இதுவரையில் கோரவில்லை எனவும் கேட்டார்.

எனவே, சிங்கள கிறிஸ்தவர்களுக்காக மாத்திரம் கார்டினல் பேசுகிறாரா, இல்லை உலகில் உள்ள கிறிஸ்தவர்களுக்காகப் பேசுகிறாரா எனவும் கேள்வி எழுப்பிய சிறிதரன் எம்.பி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில், தமிழ் கிறிஸ்தவர்களே அதிகளவில் உயிரிழந்திருந்தனர் எனவும் அ​தனால், அனைவருக்காகவும் அவர் குரல் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.