ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும் வகையிலான சட்டத்திருத்தத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாங்காங் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து 2019 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. ஹாங்காங் ஜனநாயக செயல்பாட்டாளர்கள் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஹாங்காங் வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டு போராட்டம் கருதப்படுகிறது. போராட்டங்களை தொடர்ந்து ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் விதமாக சீனா அங்கு சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

