மன்னார் விபத்து: மாணவனின் இறுதிக் கிரியையில் மக்கள் அஞ்சலி- கைதான இருவரும் விளக்கமறியலில்!

416 0

தலைமன்னாரில் ரயில் மற்றும் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவனின் இறுதிக் கிரிகையை இன்று இடம்பெற்றது.

இதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமன்னார் பியர் பகுதியில் நேற்று மதியம் தனியார் பேருந்தும் ரயிலும் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் மாணவனின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) காலை அஞ்சலி இடம்பெற்றது. இதன்போது, மாணவனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறிப்பாக சிறுவனின் உடலுக்கு தலைமன்னார் பகுதி மக்கள், தலைமன்னார் பாடசாலை மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச ஊழியர்கள் எனப்பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பொது மக்களின் அஞ்சலியின் பின்னர், சிறுவனின் உடல்  இன்று மாலை மூன்று மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இதேவேளை, விபத்திற்குள்ளான தனியார் பேருந்தின் சாரதி மற்றும் குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோர் நேற்று தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.