பருத்தித்துறையில் வீடு புகுந்து மர்மக்கும்பல் அட்டகாசம்; சிவராத்திரி நாளில் அரங்கேற்றம்

271 0

யாழ்.பருத்தித்துறை சுப்பர்மடத்திலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை அடித்துக் கொலை செய்தும் பெறுமதியான பொருட்களைத் தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பியுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் சிவராத்திரி வழிபாட்டுக்காக நேற்று முன்தினம் இரவு ஆலயத்துக்குச் சென்றிருந்த நிலையில் இந்தப் பாதகச் செயலை கும்பல் நடத்தியுள்ளது.

வீட்டில் வதியும் மூவரும் நேற்று முன்தினம் இரவு ஆலயத்துக்குச்சென்றுள்ளனர். அதிகாலை வீடு திரும்பியபோது அங்கு சேதமாக்கியிருந்தமையை அவதானித்தனர்.

வளர்ப்பு நாய் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. புறாக் கூடு சேதப்படுத்தி புறாக்கள் சில கொலை செய்யப்பட்டிருந்தன.

வீட்டினுல் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி வெளியில் எடுத்துவரப்பட்டுதாக்கி சேதப்படுத்தப்பட்டிருந்தது.

பெறுமதியான பொருள்களும் அடித்துச் சேதப்படுத்தப்பட்டிருந்தன. தொலைக்காட்சி பெட்டி இருந்த ராக்கை தீ வைத்து கொளுத்தப்பட்டிருந்தது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடம்பெற்ற வீட்டில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தப் படுபாதகச் செயலுக்கான பின்னணி தொடர்பில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.