தேர்தல் மன்னன் பத்மராஜன் 216-வது முறையாக மனுதாக்கல்

263 0

தேர்தல் மன்னன் பத்மராஜன் மேட்டூர், எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (வயது 60). பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்த இவர் உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம், எம்.எல்.ஏ., எம்.பி., ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் முக்கிய பிரமுகர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டு உள்ளார். எனவே இவர் ‘தேர்தல் மன்னன்’ என்று மேட்டூர் மக்களால் அழைக்கப்படுகிறார். ஆனால் இதுவரை எந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றதே இல்லை. இருப்பினும் விடாமுயற்சியுடன் தேர்தலில் போட்டியிடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பத்மராஜன் மேட்டூர், எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட நேற்று, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதுவரை பத்மராஜன் தேர்தலில் போட்டியிட 216-வது முறை மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.