பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் மரணம்

397 0

ஹொரவ்பொத்தானை – கபுகொல்லாவ பிரதான வீதியில், இன்று (11)  பிற்பகல் 1.30 மணியளவில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருவன்வெளி மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்று வந்த ஹொரவ்பொத்தானை-01ஆம் கட்டை மொரகொட, மூதலான பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.கே.எம்.த.சில்வா (21 வயது) எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஹொரவ்பொத்தானையிலிருந்து வாகொல்லாகட பகுகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன், உழவு இயந்திரம் மற்றும் கெப் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பஸ் சாரதியின் அசமந்தப் போக்கினால் விபத்து சம்பவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் அவரை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.