எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அமலநாயகி

313 0

எங்களது உறவுகளை தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது, எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது. வீதியோரங்களில் இருந்து எங்களது உறவுகளை தேடமுடியாத நிலையிலேயே இன்று கண்ணீர்விட்டு வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லையெனவும் சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்தப்பட்டு தமக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.