விசேட பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் கலாசாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள்

454 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப் போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென்மேலும் ஓர்  இனநாயக நாடாக சென்றுகொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் சிங்களமயமாக்கப்படுவதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது.

ஓக்லாண்ட் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது

ஓக்லாண்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலங்கை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் கொடூரமான உள்நாட்டுப்போர் முடிந்து 12 ஆண்டுகளுக்குப் பின்னும் இலங்கை எவ்வாறு மென்மேலும் ஓர் இனநாயக நாடாக சென்று கொண்டிருக்கின்றது என்பதையும், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதையும் சிங்களமயமாக்கப்படுவதையும் ஒரு புதிய அறிக்கை விபரிக்கின்றது.

• தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு தீவிரமாக உள்ளது – வடக்கு மாகாணத்தில் ஆறு குடிமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் எனும் விகிதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குடிமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் எனும் விகிதமும் இருக்கிறது.

• வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக பிரிக்கும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கத்துடன் சிங்கள குடியேற்றம், பௌத்த விகாரைகள், யுத்த வெற்றி நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் நில ஒதுக்கீடுகள், வனவிலங்குகள் சரணாலயங்கள், வனப்பகுதி ஒதுக்கங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் திட்டமிட்டு அழிக்கும் உத்திகள் இடம்பெறுகின்றன.

• நீதியை நிலை நாட்டும் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசு பின்வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டு, எதிர்காலதில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை நிறுத்தவும் தடுக்கவும் சர்வதேச சமூகத்தின் செயல் ரீதியான வகிபாகத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஆறு நாடுகள் கூட்டாக சேர்ந்து ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு முன்வைத்துள்ள இலங்கை தொடர்பிலான முதல் வரைவு அலட்சியப்படுத்தியுள்ளது.

• இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்ற மனித உரிமை ஆணையாளர் பச்சிலட் மற்றும் நான்கு முன்னாள் ஆணையாளர்கள், ஐ. நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு பிரதிநிதிகள், இலங்கை தொடர்பிலான ஐ. நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையை தயாரித்த அனைத்து உறுப்பினர்கள் ஆகியோரது பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தில் உள்ளடக்கவேண்டும்.

Oakland, CA:  : ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் இலந்கையைப் பற்றிய புதிய தீர்மானத்தை ஆராய்கின்ற வேளையில், ஓக்லாண்ட் நிறுவனத்தின் புதிய அறிக்கையான – ‘முடிவற்ற போர்: இலங்கையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட நிலம், வாழ்வு மற்றும் அடையாளம்”, என்ற புதிய ஆய்வு அறிக்கை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எந்தளவுக்கு துன்பப்படுத்தப்டுகின்றார்கள் என்பதற்கான அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை முன்வைக்கின்றது.

சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றவும், தமிழ் மக்கள் தமது நிலங்களுக்கு செல்வதை தடுக்கவும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில்தமிழர் பிரதேசங்களில் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றம் வளர்ந்து வருகிறது.

நீர்ப்பாசனத் திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள், தொல்பொருள் இட ஒதுக்கீடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், வனப்பகுதி மற்றும் சிறப்பு பொருளாதார வலயங்கள் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் நில அபகரிப்பானது 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து மேலும் மோசமடைந்துள்ளதாக” அறிக்கைக்கான ஆராய்ச்சியை ஒருங்கிணைத்து செயற்பட்ட அனுராதா மிட்டால் தெரிவித்தார்.

“தமிழர்கள் அவர்களது பரம்பரை நிலங்களை பயன்படுத்த அனுமதி மறுப்பது, கிராமங்களின் பெயரை மாற்றுவது, தேவாலயங்கள் மற்றும் இந்து கோவில்களை பௌத்த விகாரைகளாக மாற்றுவது, சிங்கள மேலாண்மையை நிலைநாட்டும் நினைவுச்சின்னங்களை நிறுவுவது போன்றவை, தமிழர் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அழிக்கும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியாகும்.

பாரம்பரிய தமிழ் தாயகத்தை புவியியல் ரீதியாக துண்டாட வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் உத்தி” என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த உத்திக்காக, மகாவலி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம், வன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவை பயன்படுத்தப்படுவதை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகின்றது.


போருக்குப் பிந்தைய இலங்கை பற்றிய நான்காவது ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கையான “முடிவற்ற போர்: இலங்கையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட நிலம், வாழ்வு மற்றும் அடையாளம்”, என்ற புதிய ஆய்வு அறிக்கை, நில அபகரிப்பு மற்றும் தமிழ் மக்கள் மீது பரந்தளவில் காணப்படும் இராணுவ மயமாக்கலின் பாதிப்பு ஆகியவற்றை தக்க தருணத்தில் வெளிக்கொண்டு வருகின்றது.

இராணுவ ஆக்கிரமிப்பு தீவிரமாக உள்ளது – கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆறு குடிமக்களுக்கும் ஒரு இராணுவ உறுப்பினர் என்ற விகிதாசாரம் காணப்டுகின்றது.
“இராணுவம் தொடர்ந்து ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்து வருகிறது. 5 நட்சத்திர உல்லாச விடுதிகள், சிற்றுண்டிசாலைகளை இராணுவத்தினர் நடத்துகின்றனர். ஆக்கிரமித்துள்ள நிலங்களில் இராணுவத்தினர் பயிர்ச்செய்கை செய்கின்றனர். இராணுவத்தின் தீவிர பிரசன்னம் உள்ளுர் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது” என்று மிட்டால் மேலும் தெரிவித்தார். இதேவேளை, யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும், யாழ் மாவட்டத்தில் மட்டும் 23,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் இடம்பெயர்ந்து தமது மீள்குடியேற்றத்துக்காக காத்திருக்கின்றனர்.

இலங்கை முழுவதும் சிங்கள மற்றும் புத்த மதத்தின் மேலாதிக்கத்தை ஏற்படுத்தும்வகையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கு ராஜபக்ஸ அரசாங்கமானது இராணுவம் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களை பயன்படுத்தும் செயல் ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உடனடி கவனத்தை ஈர்க்கவேண்டும்.

“ஜ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லட் ஜனவரி 2021 இல் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கை கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதின் அவசியத்தை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் எதிர்கால வன்முறை மற்றும் முரண்பாடுகளை தடுக்கவும் தவிர்க்கவும் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. யுத்தத்தின்போது போர்க்குற்ற சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் இராணுவ உயர் தளபதிகள் மற்றும் ஏனையவர்களுக்கு எதிரான தடைகள், மற்றும் இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துதல் போன்ற ஆணையாளரின் அழைப்பானது, நீதி மற்றும் மனித உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு இன்றியமையாதது ” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆறு நாடுகள் கூட்டாக சேர்ந்து ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு முன்வைத்த இலங்கை தொடர்பிலான முதல் வரைவு தீர்மானமானது நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான அமைதியை உறுதி செய்வதற்கான தெளிவான அணுகு முறையை கோடிட்டு காட்ட தவறிவிட்டது.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் பச்சிலட், முன்னாள் ஆணையாளர்கள், ஐ. நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐ. நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையை தயாரித்த அனைத்து உறுப்பினர்கள் ஆகியோரது பரிந்துரைகளில் இருந்து இந்த வரைபு முற்றிலும் விலகி நிற்கிறது. இலங்கையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட நிலம், வாழ்வு மற்றும் அடையாளம் ஆகியவற்றின் துன்பகரமான யதார்த்தத்தை ‘முடிவற்ற போர்’ வெளிப்படுத்துவதுடன் மோசமடைந்துசெல்லும் மனித உரிமைகள் நிலைமையை சீர்படுத்துவதற்கு சர்வதேச சமூகதின் கூட்டு நடவடிக்கைக்கான ஆதாரங்களை முன்வைக்கின்றது ” என்று மிட்டால் மேலும் கூறினார்.

இந்த பரிந்துரைகளை ஐ. நா மனித உரிமைகள் சபை தீர்மானம் உள்ளடக்க வேண்டும் என்பதுடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் அதேவேளை, வடக்கு -கிழக்கில் இராணுவமயமாக்கல் இல்லாமல் செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு செய்ய தவறுவது, சர்வதேச மனித உரிமைகள் பரிபாலனத்தை மீண்டும் கேலிக்கூத்தாக்குவதாக அமையும்.