ஈழத் தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் புதுப்பிக்கப்பட்ட வரைபு!

355 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபில் தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் எவையும் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னர் வெளியிடப்பட்டிருந்த நகல்வரைபின் உரையின் மொழியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன். எனினும் புதுப்பிக்கப்பட்ட வரைபில் சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறை இணைத்துக் கொள்ளப்படவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை எதிர்கால விசாரணைகளில் பயன்படுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகத்தன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பயணதடைகள் போக்குவரத்து தடைகள் போன்றவற்றை விதிக்குமாறும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து எதனையும் புதுப்பிக்கப்பட்ட வரைபு குறிப்பிடவில்லை.

இலங்கையில் தமிழர்கள் முஸ்லிம்கள் அதிகளவிற்கு ஓரங்கட்டப்படுவது சிவில சமூகத்தினர் கண்காணிக்கப்படுவது அச்சுறுத்தப்படுவது ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை பொதுமக்கள் நினைவுகூறுவது மீதான கட்டுப்பாடுகள் – நினைவுத்தூபிகள் அழிக்கப்படுதல் குறித்த கரிசனைகளும் புதிதாக இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் மனித உரிமை ஆணையகம் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய வலுவான விதத்திலும் சுதந்திரமாகவும் செயற்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்ற விடயமும் புதுப்பிக்கப்பட்ட வரைபில் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் தமிழர்களின் எதிர்பார்ப்பை குறித்த வரைபு கொண்டிருக்கவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.