தலையே போனாலும் தே.மு.தி.க.வை தலைகுனிய விடமாட்டோம்- விஜயபிரபாகரன்

245 0

234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

பெரம்பலூரில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் துரைகாமராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:-

தே.மு.தி.க. மக்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது.  இலக்கை அடைய இப்போது இருக்கும் சூழலில் இரண்டு அல்லது மூன்று வழிகளில் சென்றாக வேண்டியுள்ளது.

2016-ல் சட்டசபையில் மக்கள் பிரச்சனை குறித்து பேசியதால் தான் அ.தி.மு.க.விற்கும், தே.மு.தி.க.விற்கும் இடையே பிரச்சனை வந்தது. அ.தி.மு.க., தி.மு.க. இருவரும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர். தங்களுக்கு இரண்டு கட்சியும் துரோகமும், நல்லதும் செய்திருக்கிறார்கள். மேலும் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை. மக்களுக்கு மாற்றம் தேவை, அதை தே.மு.தி.க.வால் மட்டுமே கொண்டுவர முடியும்.

கூட்டணி பேரம் பேசுவது எங்களது நோக்கமல்ல. கூட்டணி பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் அவசரப்படுகின்றன. தலையே போனாலும் தே.மு.தி.க.வை தலைகுனிய விட மாட்டோம். நாங்கள் நினைத்தால் 234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றிபெற முடியும் என்றார்.