உள்நாட்டில் தயாரித்து, மேம்படுத்திய ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது.
அதிகப்படியான இந்திய நகரங்களை குறிவைக்கும் வகையில் சுமார் 700 கிமீ இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாபர் ரக ஏவுகணை வரிசையில் வெர்சன்-2 என அழைக்கப்படும் இந்த ஏவுகணை ஏற்கனவே அந்நாட்டு பயன்பாட்டில் இருந்து வரும் பாபர் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்டதாகும். அதிநவீன காற்றியக்கவியல் மற்றும் மின்னணுவியல் முறைகளை கொண்டிருப்பதால் தரை மற்றும் கடலில் உள்ள எவ்வித இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என அந்நாட்டு ராணுவ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறப்பதோடு சில வகை ஸ்டெல்த் அம்சங்களையும் கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. GPS வழிகாட்டுதல் இல்லாமலும் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்படி பல்வேறு ஊடுருவல் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாபர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானிற்கு பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என அந்நாட்டு ராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனையின் போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர், ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். இத்துடன் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

