உயிர்த்த ஞாயிறுதாக்குதல் அறிக்கை விவகாரம் – கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு மல்கம் ரஞ்சித் மறுப்பு

194 0

கத்தோலிக்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார்.

இரண்டாம் திகதி மல்கம் ரஞ்சித்தை சந்திப்பதற்கு அரசதரப்பினர் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் எனினும் இந்த சந்திப்பு இடம்பெறாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு வழங்கப்படும் வரை அவர் எந்த அரசியல்வாதியையும் சந்திக்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

எழுத்து மூல வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும் அரசாங்கத்திடமிருந்து உத்தியோகபூர்வ வேண்டுகோள் எதுவும் கிடைக்கவில்லை என பேராயர் இல்ல பேச்சாளர் ஒருவர் தெரிவித்;துள்ளார்.

முன்னதாக அரசஎதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்திக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின்போது நாங்கள் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மீது நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொள்வோம், ஜனாதிபதி உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு நிச்சயமாக நீதி வழங்குவார் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த சந்திப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளதை இராஜாங்க அமைச்சர் உறுதி செய்துள்ளார். அமைச்சர் ஜோன்சன் பெர்ணாண்டோ இந்த சந்திப்பு இரத்தானதை உறுதி செய்துள்ளார் என இராஜாங்க அமைச்சர் அருநதிக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை வெளியிடுவதற்கு அச்சமடையப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 55 பேரின் வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அருந்திக பெர்ணான்டோ ஆனால் அதில் உள்ள சில விடயங்கள் இரகசிய தன்மை வாய்ந்தவை என குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபருடனான ஆலோசனையின் பின்னர் இந்த ஆவணம் பகிரங்கப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய அரசாங்கம நியமித்த குழுவை மல்கம் ரஞ்சித் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.