மியான்மர் ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் மரணம்

235 0

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுத்து தலையில் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த இளம்பெண் ஆங் சான் சூ மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ அட்சிக்கு எதிராக கடந்த இரு வாரங்களாக மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் ராணுவத்துக்கு எதிராக நடத்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர. இந்தத் தாக்குதலில் 20 வயதான ஆங் சான் சூ தலையில் சுடப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆங் சான் சூ மரணம் அடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நடந்து வரும் போராட்டத்தில் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும். ஆங் சான் சூயின் மரணத்தை தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று  மியான்மார்  ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால்  மியான்மார் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.

என்ன நடக்கிறது மியன்மரில்?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது