போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து மக்களின் தேவையைப் புரிந்து கொள்ளுங்கள்- சாணக்கியன்

195 0

போராட்டத்தில் பங்கேற்றவர்களைத் தண்டிப்பதை விடுத்து, மக்களின் தேவை என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இரா.சாணக்கியனிடம் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குமூலம் பெறப்பட்டது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பாக பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த வாக்குமூலங்கள் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும்போது சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கையானது இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் செயற்பாடாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குமூலங்களை பதிவுசெய்தனர்.

வடக்கில் வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் கிழக்கில் வாழைச்சேனை, மூதூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்தும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை மீறப்பட்டதா, பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதா, கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலங்கள் புதிவுசெய்யப்பட்டன.

முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரையில் இவ்வாறு வாக்குமூலங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.