2 ஆம் கட்ட தடுப்பூசி 12 வாரங்களின் பின்னர் செலுத்தப்படும் !

340 0

ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு 12 வாரங்களின் பின்னர் 2 ஆம் கட்டமாக தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் முதல் மருந்தை பெற்றுக்கொண்ட 76 விகிதமானவர்களுக்கு 12 வாரங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதலாவது தடுப்பூசியை செலுத்தி 8 – 12 வாரங்களுக்கு பின்னர் அடுத்த தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள நிலையில் இது குறித்த இறுதித் தீர்மானத்தினை அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் 185,000 க்கும் மேற்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் முதல் சுற்று கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தனியார் சுகாதார தரப்பினருக்கும் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே கூறியுள்ளார்.