பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு, விஜயகாந்த் வலியுறுத்தல்

179 0

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கலால் வரியை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருந்தும் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் உயர்த்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பொருளாதாரத்தில் சிக்கித்தவித்து வந்த சாமானிய மக்கள் தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகின்றனர். இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களின் நலனை கருத்தில்கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கலால் வரியை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல விற்பனை வரியை குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.