எம்.ஜி.ஆர். வடிவில் மோடியை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்- எல்.முருகன்

185 0

வருகிற சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் பா.ஜனதா தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேல் யாத்திரையை தொடர்ந்து தனது வெற்றி யாத்திரையை பா.ஜனதா இன்று முதல் தொடங்குகிறது. தேர்தல் பிரசாரம் தொகுதி வாரியாக தொடர்ந்து நடைபெறும்.

நாங்கள் வேலை கையில் எடுத்ததும் அதை குறை சொன்னார்கள். நடத்த விடக்கூடாது என்று டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் செய்துள்ளார்கள். இந்துக்களையும், இந்து கடவுள்களையும் இழிவு படுத்தியவர்களை கண்டிக்கவே நாங்கள் வேல் யாத்திரை நடத்தினோம்.

இப்போது அவர்களும் கையில் வேல் எடுக்கிறார்கள். என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது. தி.மு.க. கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி செயல்பாடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சசிகலா வருகையால் என்ன தாக்கம் என்பதை இப்போது சொல்ல முடியாது. அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை பொருத்தே தெரியவரும்.

எல்லோருக்கும் பொது எதிரி தி.மு.க. என்று கூறி இருக்கிறார். அது உண்மைதான். ஆனால் அ.தி.மு.க.வில் சேருவாரா என்பதெல்லாம் அவர்கள் உட்கட்சி பிரச்சனை. நான் எதுவும் சொல்ல முடியாது.

வருகிற தேர்தலில் பா.ஜனதா பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிச்சயம் இடம்பெறுவார்கள். மோடியின் திட்டங்களால் தமிழக மக்கள் ஏராளமானோர் பலன் அடைந்துள்ளார்கள். அது வருகிற தேர்தலில் வெளிப்படும்.

தமிழக மக்கள் எம்.ஜி.ஆரின் மறுவடிவாக பிரதமர் மோடியை பார்க்கிறார்கள். எனவே இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று பா.ஜனதா 35 தொகுதியில் 2-வது இடத்தை பிடித்தது. 60 தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயித்ததும் குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதாவுக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை இப்போது சொல்ல முடியாது. அது பற்றி தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். கொங்கு மண்டலத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.