சுதாகரன்-இளவரசிக்கு சொந்தமான 23 சொத்துகள் பறிமுதல்

235 0

தூத்துக்குடி மாவட்டத்தில் சசிகலா உறவினர்களான இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 23 சொத்துகள் மற்றும் தஞ்சையில் 26 ஆயிரம் சதுரஅடி காலிமனை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் அண்மையில் விடுதலையாகினர். சுதாகரன் இதுவரை விடுதலையாகவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இளவரசி, சுதாகரனின் சொத்துகளை தமிழக அரசு அரசுடைமையாக்கியது.

இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சேரகுளம், வல்லகுளம், கால்வாய், மீரான்குளம் ஆகிய கிராமங்களில் சுதாகரன், இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ள 23 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டு உள்ளன. இந்த சொத்துகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல தஞ்சை வ.உ.சி. நகர் முதல் தெருவில் பிளாக் எண் 75-ல் உள்ள 26,540 சதுர அடி பரப்பளவு கொண்ட காலிமனை அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

தஞ்சை வ.உ.சி. நகரில் உள்ள இந்த காலிமனையை 1995-ம் ஆண்டு ரூ.11 லட்சத்துக்கு வாங்கி உள்ளனர். தற்போது இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சொத்துகளை பறிமுதல் செய்து தமிழ்நாடு அரசின் சொத்து என்று பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என மேற்படி இருமாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.