உயிர்த்தஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டுசக்தியொன்று உள்ளது என்பதற்கான எந்த ஆதாரங்களும் நான்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை கிடைக்கவில்லை

194 0

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டுசக்தியொன்று உள்ளது என்பதற்கான எந்த ஆதாரங்களும் நான்பதவியிலிருந்து நீக்கப்படும் வரை கிடைக்கவில்லை என சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தெரிவித்துள்ள அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே அது இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது தெரியவந்தது என குறிப்பிட்டுள்ளார்.
மாவனல்ல புத்தர் சிலை தகர்ப்பு குறித்து தெரிவித்துள்ள ஷானி அபயசேகர இந்த சம்பவம் 2018 டிசம்பர் 25ம் திகதி இடம்பெற்றது இது குறித்த விசாரணைகளை சிஐடியினரிடமும் ஏனையவர்களிடமும் ஒப்படைத்தோம் நானும் அந்த பகுதிக்கு சென்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேகாலை பொலிஸார் இரண்டுபேரை கைதுசெய்தனர் ஆனால் சந்தேகநபர்களான இரு சகோதரர்களான சாதீக் மற்றும் சஹீட்டை கைதுசெய்ய தவறிவிட்டனர் எனவும் ஷானி அபயசேகர தெரிவித்துள்ளார்.

சகோதரர்கள் இருவரும் கடல்வழியாக தப்பிச்செல்ல முயல்கின்றனர் என எனக்கு நம்பதகுந்த தகவல்கள் கிடைத்தன என தெரிவித்துள்ள ஷானி அபயசேகர இதன் காரணமாக நான் அங்கு சென்றேன் ஆனால் அந்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மறுநாள் வனாத்தவில்லு பகுதியி;ல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாமில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன மாரசிங்கவும் அவரது குழுவினரும் அதனை கண்டுபிடித்தனர் இரவில் தேடவேண்டாம் என நான் அவர்களை கேட்டுக்கொண்டேன் இதன் பின்னர் அந்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவ்வப்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டு சக்தியொன்றிற்கு தொடர்பிருப்பது குறித்த தகவல்கள் கிடைத்தன ஆனால் உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் ஷானி அபயசேகர தெரிவித்துள்ளார்.

நான் சிஐடியிக்கு தலைமை தாங்கும்வரை அவ்வாறான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் வெளிநாட்டை சேர்ந்த விசாரணையாளர்கள் கூட இங்குவந்தனர் உறுதியான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை,தற்போது ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா என்பது தெரியவில்லை எனவும் ஷானி அபயசேகர தெரிவித்துள்ளார்.