ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்!

190 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயப் பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமயர்த்துமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை எட்டு மணிக்குக் கூடிய பெற்றோர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் பெயர் பட்டியலுக்குள் தமது பாடசாலை உள்வாங்கப்படவில்லை என பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான சகல தகுதிகளும் இருந்தபோதும் தமது பாடசாலை குறித்த பட்டியலில் உள்வாங்கப்படாமைக்கான தெளிவுபடுத்தலை தமக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் மாவட்ட அரசாங்க அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடிய போது எமது பாடசாலை தெரிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தபோதும் தற்போது அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை ஏனென அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்துடன், பாடசாலை அதிபர் உரிய தரவுகள் அனுப்பப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள நிலையில், வலயக் கல்விப் பணிப்பாளர் வருகைதந்து இதற்கான பதிலை வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, போராட்டம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை ஏழு மணிக்கு முன்னதாகவே பாடசாலையின் இரண்டு வாயில்களுக்கும் முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டு பாடசாலை வளாகத்திற்குள் பெற்றோர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.