கிழக்கு மாகாண வித்தகர் விருது

225 0

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் தமிழ் இலக்கிய விழாவில், சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியரும் பிரபல எழுத்தாளருமான சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல் ஹக், ஊடகத்துறைக்கான’வித்தகர் விருது’க்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

1964.08.27ஆம் திகதி சாய்ந்தமருதில் பிறந்த இவர், சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். 1981ஆம் எழுத்துலக வாழ்வை ஆரம்பித்த நூறுல் ஹக், 2021-05-15ஆம் திகதி 40 ஆண்டுப் பணியை ‘மாணிக்க விழா’ வுடன் நிறைவு செய்யவுள்ளார்.

ஆகில இலங்கை சமாதான நீதவானாகிய இவரது எழுத்துப் பணியில் சிறந்த அரசியல், இஸ்லாமிய, சமூகவியல் மற்றும் வரலாற்றுத் துறை ஆய்வாளராகவும், சமூக சேவைப் பணிகளில் அதிக ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றார். இலங்கையின் தேசியப் பத்திரிகைகளிலும், வாரப்பத்திரிகைகளிலும் ஆய்வுக்கட்டுரைகளையும், பல ஆக்கங்களையும் தொடர்ச்சியாக எழுதிவரும் இவர் இதுவரை 7 நூல்களை வெளியிட்டுள்ளார்.

தீவும் தீர்வுகளும் 1998 (அரசியலும் வரலாறும்), சிறுபான்மையினரின் சில அவதானங்கள் 2002 (அரசியலும் வரலாறும்), முஸ்லிம் பூர்வீகம் 2006 (அரசியலும் வரலாறும்), இமானியப் பேரொளிகள் 2009 (இஸ்லாமிய ஆய்வு), அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் 2011 (அரசியலும் வரலாறும், – இந்த நூல் 2012ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபையின் சாகித்திய விருதை விமர்சனத் துறைக்குப் பெற்றமை குறிப்பிடத்தக்து), முஸ்லிம் அரசியலின் இயலாமை 2016 (அரசியலும் வரலாறும்), யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை 2017 (அரசியல்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.