ஜெயலலிதாவின் வரி பாக்கி விவரங்களைக் கேட்டு தீபக் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் தீபக் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.9 கோடியை சென்னை மாவட்ட முதன்மை கோர்ட்டில் டெபாசிட் செய்துள்ளது. இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவுக்கு உள்ள வருமான வரி பாக்கி தொகையை வசூலிக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், ஜெயலலிதாவுக்கு வருமான வரி, சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி பாக்கித் தொகை எவ்வளவு உள்ளன? இதுகுறித்து அனைத்து விவரங்களையும் கேட்டு வருமான வரித்துறைக்கு கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை பதில் எதுவும் இல்லை. எனவே, இந்த விவரங்கள் அனைத்தையும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.