அமெரிக்கா மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட டாக்டருக்கு அலர்ஜி

225 0

அமெரிக்கா மாடர்னா நிறுவன தடுப்பூசியை செலுத்தி கொண்ட டாக்டர் ஹாசைன் சதர்சாதேவுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா நிறுவனம் ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

அதேபோல் அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன.

தடுப்பூசியை அவசர பயன் பாட்டுக்கு அனுமதிக் கோரி இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்தன. இதில் முதலில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பின்னர் 2-வதாக மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாடர்னா நிறுவன தடுப்பூசியை செலுத்தி கொண்ட டாக்டருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

பாஸ்டன் மெடிக்கல் சென்டரில் பணியாற்றும் டாக்டர் ஹாசைன் சதர்சா தேவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட உடனே அவருக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்டதாகவும், மயக்கம் மற்றும் இதயம் வேகமாக இயங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஸ்டன் மெடிக்கல் சென்டரின் செய்தி தொடர்பாளர் டேவிட் கிப்மே கூறும்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட டாக்டர் சதர்சாதே, அலர்ஜி ஏற்பட்டதாக உணர்ந்தார். உடனே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருக்கிறார் என்றார்.

ஏற்கனவே பைசர் நிறுவன தடுப்பூசியாலும் சிறு பக்க விளைவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.