யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

219 0

மற்றொருவரின் ஆவணங்களை வைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன், கனடா கடவுச்சீட்டை பயன்படுத்திகொண்டு, டுபாய் ஊடாக, கனடாவுக்கு தப்பியோடுவதற்கு முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ரி.கே. 649 என்ற விமானத்தின் ஊடாகவே டுபாய்க்குச் செல்வதற்காக, விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.

அங்கு விமான நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கூடத்தில், கனடா கடவுச்சீட்டை காண்பித்துள்ளார். அப்போது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், மேலதிக ஆவணங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த கனடா கடவுச்சீட்டு வேறு ஒருவருடையது என்றும் அதில், இவ்விளைஞனின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது அதனையடுத்தே, அவ்விளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.