யாழ் பல்கலைக்கழக கண்டிய நடனப் பிரச்சினை வழக்கு மாணவர்களால் மீளப்பெறப்பட்டதையடுத்து முடிவுறுத்தப்பட்டுள்ளது

306 0

 

uniயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த யூலை மாதம் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியினால் முடிவுறுத்தப்பட்டது.

கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இருபகுதியினரும் சமாதானமாக இணங்கி வழக்கை மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதியின் அறிவறுத்தலுக்கேற்ப மோதலின் போது காயப்பட்ட மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தத்தமது முறைப்பாடுகளை மீளப்பெற்றனர்.

இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வழக்கு எடுக்கப்பட்ட போது கோப்பாய் பொலிஸாரினால் இருபகுதியினரும் தாமாகவே சமாதானமாக இணங்கிக்கொண்டு முறைப்பாடுகளை மீளப்பெற்றது தொடர்பாக அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்கரன் இருபகுதி சந்தேக நபர்களையும் விடுவித்து வழக்கு முடிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த யூலை மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் கண்டிய நடனம் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டதையடுத்து தமிழ், சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.