அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்தது தேர்வாளர்கள் குழு

236 0

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள தேர்வாளர்கள் குழுவினர் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜோ பைடன் வெற்றியை உறுதி செய்தனர்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிபரை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். பைடன் 306 வாக்குகளும், நடப்பு அதிபரான டொனால்டு டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 50 மாகாணங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 538 தேர்வாளர்கள் குழுவினர் வாக்களித்தனர்.
அரிசோனாவில் 11 பேர், ஜார்ஜியாவில் 16 பேர், நெவடாவில் 6 பேர், பென்சில்வேனியாவில் 20 பேர், விஸ்கான்சினில் 10 பேர் என தேர்வாளர்கள் குழுவினர் ஜோ பைடனுக்கு வாக்களித்தனர்.
அந்தந்த மாகாணங்களில் தேர்வாளர் குழுவினர், அதிபர், துணை அதிபரை தேர்ந்தெடுத்து வாக்களித்து கையெழுத்திட்டனர்.
தேர்வாளர் குழுவினர் வாக்களிப்பால் தேர்தல் முடிவுகள் மாற வாய்ப்பில்லை. மேலும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை. அமெரிக்காவில் அதிபராவதற்கு இவர்களது அங்கீகாரம் அவசியமானது.
இதன்படி,  கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பைடன்  பெற்றார். இதன் காரணமாக  270 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.
ஜோ பைடன் அதிபராக பதவியேற்பதற்கு இந்த நடைமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனெனில், டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ஆகும். மேலும், தேர்தலை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதில் சட்டரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.