அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின் தாக்கம் மிக மோசமாக இருக்கும் – பில்கேட்ஸ்

265 0

அடுத்த 4 -6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின்  தாக்கம் மிக மோசமாக இருக்கும் என பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் உலகின்  மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் `பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன்`என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் உள்ளார்.

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசிகளை  உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை நிதிஉதவி அளித்து வருகிறது. இந் நிலையில், பில்கேட்ஸ்  அண்மையில் ஊடகமொற்றிற்கு இது குறித்து செவ்வியளித்திருந்தார்.

குறித்த செவ்வியில்  அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனாத் தொற்றின் தாக்கம், மிக மோசமாக இருக்கும். ஐ.எச்.எம்.இ. என்ற சுகாதார நிறுவனம், மேலும் 2 லட்சம்பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் என்று கணித்துள்ளது.

ஆகவே, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு  செய்தால், பெருமளவு உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.

கடந்த 2015-ம் ஆண்டு நான் கணித்தபோது, உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தேன். எனவே, இன்னும் அதிக உயிரிழப்புகளை கொரோனா ஏற்படுத்தக்கூடும். கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை. அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு  எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஆனால், அமெரிக்காவிலும், பிற உலக நாடுகளிலும் நான் கணித்ததை விட கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு எனது அறக்கட்டளை ஏராளமான நிதிஉதவி அளித்து வருகிறது. அமெரிக்க அரசுக்கு அடுத்தபடியாக நாங்கள்தான் அதிக நிதிஉதவி அளித்து வருகிறோம்.

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில்  அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும், மனித குலம் முழுமைக்கும் அமெரிக்கா உதவ வேண்டும்.

உலக பொருளாதாரம் மீண்டுவர வேண்டும். கொரோனா பலி எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சர்வதேச ஒத்துழைப்பை தடுப்பது தவறு. அதனால், எல்லா கொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனையும் அதிகரிப்பது அவசியம். இனிவரும் மாதங்களில் மேலும் சில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைத்து விடும்.

முன்னாள் ஜனாதிபதிகள் கிளிண்டன், புஷ், ஒபாமா ஆகியோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். அதுபோல், என்னுடைய முறை வரும்போது, நான் வெளிப்படையாகவே தடுப்பூசி போட்டுக்கொள்வேன். மருத்துவ தேவை அடிப்படையில்தான் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். பணபலம் அடிப்படையில் கிடைக்கக்கூடாது.

கொரோனா பாதிப்பு, ஏற்றத்தாழ்வை அதிகரித்துள்ளது. கறுப்பினத்தினரும், குறைந்த வருவாய் பிரிவினரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவருக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும். தடுப்பூசி கிடைத்தாலும், இன்னும் 6 மாதங்களுக்கு எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்” இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்.