மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் தீ விபத்து- நுவரெலியாவில் சம்பவம்

207 0

நுவரெலியா- அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இரவு 9 மணியளவில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வீடுகளில் இருந்த 7பேர், தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தின்போது, வீட்டின் உரிமையாளர் ஒருவர் சிறு, சிறு எரி காயங்களுக்கு உள்ளாகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் எரிவாயு கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், பெருமளவிலான வீட்டு உபகரணங்கள்,பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை சம்பவம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.