முல்லைத்தீவில் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாது

281 0

muslim_sch_termமுல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகளை பர்தா அணியக்கூடாது என பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் அதிகாரிகள் பணித்துள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

பரீட்சையின் மத்திய நிலையமாக இயங்கும் தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பர்தாவை அகற்ற மறுத்தால் பரீட்சார்த்தியின் சுட்டெண்ணை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி பரீட்சைப் பெறுபேறு வராமல் தடுப்போம் என பரீட்சை மேற்பார்வையாளர்கள் அச்சுறுத்தியதாக முஸ்லிம் மகாவித்தியாலய ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதால் மாணவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமயத்தையும் கலாசாரத்தையும் நசுக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும், இதற்கு பரீட்சை நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.