கந்தகச் சூளையில் புடம்போட்ட வீரம்-தலைநகர் தந்த கவி.

689 0

கந்தகச் சூளையில் புடம்போட்ட வீரம்
மாவீரர் ஒளியாகி எமையாளுதே !

கார்த்திகை மாதத்தில் உருவேற்றும் வீரம்
தமிழீழ விடியலின் விடைகாணுமே !

கல்லறை யாவிலும் ஒளியேற்றும் நேரம்
கண்ணீரின் துளிகள் பூத்தூவுமே !

வல்லமை வீசிடும் மாவீரர் வாழ்வின்
தியாகங்கள் யாவும் மனதாளுதே !

உயிரதில் தீமூட்டி உறுதியில் உரமேற்றி
எரிதணல் உருவாக பகை சாடினீர் !
உரிமையின் கரமாகி எழுகின்ற புலியாகி
எதிரியின் வலிமையின் தடை நீக்கினீர் !
வேவினில் நகர்வாகி பகைவரின் களம்நாடி
வேங்கைகள் சரிதையில் தடம்பதித்தீர் !
கடலலை வானேற படகினில் புலிபாய
இலக்கினில் தீயாகி ஒளியாகினீர் !

வானூர்தி தனிலேறி விண்ணதின் அலைமேவி
தமிழரின் புதுவீரம் பதிவாக்கினீர் !
தரைமீறும் பகையோட உறுமிடும் புலியாகி
ஊழியின் காற்றாகி களமாடினீர் !
தியாகத்தில் விண்ணோங்கி தமிழீழ உரமாகி
தேசத்தின் நிலம்யாவும் வேருன்றினீர் !
தமிழீழ இறையாகி மண்காக்கும் விழியாகி
எமையாளும் உணர்வாகி வழிகாட்டுவீர் !

தலைநகர் தந்த கவி.