கிழக்கில் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை-நஸீர் அஹமட்

325 0

nazeer-ahamadகிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற பொது பல சேனாவின் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

கடும் போக்குவாதிகளின் சீற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளின் மத்தியிலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இறுதி வரை அமைதி காத்த மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டிய மத குருமார்கள் ஒழுக்கமற்ற முறையில்செயற்பட்ட போதும் ஒழுக்கமாகவும் சிறுபான்மை மக்கள் எப்போதும் இந்த நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்துகொள்பவர்கள் என்பதையும் தமிழ் முஸ்லிம் மக்கள் நாட்டிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர்.

சிறுபான்மை மக்களின் அமைதியையும் சட்டத்தை மதிக்கும் மனப்பாங்கையும் அவர்களின் கோழைத்தனமாக, கடும் போக்குவாதிகள் கருதக் கூடாது.

அத்துடன் பொதுபலசேனா அமைப்பினர் மற்றும் கடும்போக்குவாதிகள் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை சீண்டிப்பார்க்கும் விதமான கருத்துக்களை கூறுவதும் நடந்து கொள்வதும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மீது ஜனாதிபதியும் பிரதமரும் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன்.

இந்த பதற்றமான சூழ்நிலையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க இறுதி வரை களத்தில் நின்று தமது கடமைய சரிவர நிறைவேற்றிய பாதுகாப்புத் தரப்பினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும் பொறுப்புணர்வுடன் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இறுதி வரை சிறப்பாகசெயற்பட்டனர்.

அவர்களுக்கும் கிழக்கு மக்களின் பாராட்டுக்களுக்கும் உரித்தாகியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் கடும் போக்குவாதிகளின் ஒவ்வொரு செயற்பாட்டினையும் இறுதிவரை எனக்கு தொலைபேசியினூடாக அறிவித்து எனது அறிவுறுத்தல்களுக்கு அமைய சிறப்பாக செயற்பட்ட சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் சுமித் எதிரிசிங்கவிற்கும் எனது தனிப்பட்ட ரீதியிலான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்,

மாகாணத்தின் முதலமைச்சர் என்ற ரீதியில் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் ஒழுங்கை சீர் குலையாமல் பேண வேண்டிய கடமையும் உணர்ந்து செயற்பட்டு வருகின்றேன் என்பதையும் கூறிக் கொள்கின்றேன் அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும் நல்லுறவுடனும் வாழ்ந்து வருவதுடன் அதனை சீர்குலைக்க எவருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை மிகத் தெளிவாக தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது. அது மாத்திரமன்றி கிழக்கில் எவ்விதமான இனவாத செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்க முடியாது.

என்று மேலும் தெரிவித்தார்.