அப்பல்லோவில் அம்மா: வலைதளங்களில்…

220 0

201612040941213981_photoshopped-image-of-jayalalithaa-goes-viral_secvpfதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு விபரீதம் வைரலாகி வருகிறது.

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன.

அவ்வகையில், கடந்த அக்டோபர் மாதம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப் மூலமாக ஒரு ஆடியோ வதந்தி படுவேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கம்பீரக்குரலுக்கு சற்றும் பொருந்தாமற்போனாலும், அவர் உரையாற்றும் அதே தொணியில் சற்று தழுதழுத்த குரலில் யாரோ ஒரு ‘டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ பேசியிருந்த அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களை சுற்றி வந்தது.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வந்த அந்தப் போலி ஆடியோவின் சாயம், சில நாட்களுக்குள் வெளுத்துப் போனது.

தற்போது, ‘அப்பல்லோவில் அம்மா!’ என்ற தலைப்பில் அவர் சிகிச்சை பெறும்போது எடுக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த இருநாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு செவிலியின் கையைப் பிடித்தவாறு ஜெயலலிதா கட்டிலின்மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும், தலையில் கட்டுடன் அவர் படுத்திருப்பது போன்ற மற்றொரு புகைப்படமும் பலரால் சகட்டு மேனிக்கு பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இது போட்டோ ஷாப் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்ட வேறொரு நோயாளியின் புகைப்படம் என்பதும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணையப் பக்கமும் இந்த மோசடி புகைப்படத்தை தோலுரித்து காட்டியுள்ளது.