அரசாங்கம் அறிவித்த சில அத்தியாவசியப் பொருள்களுக்கான விலை குறைப்புச் சலுகைகள் இன்னும் வந்தடையவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சீனி, பெரிய வெங்காயம், டின்மீன் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கான விலைக்குறைப்பு பற்றி, உரிய இடங்களில் அறிவிக்கப்பட்ட பிற்பாடும், அதற்கான நீதி தமக்குக் கிடைக்கவில்லையென, மக்கள் கூறுகின்றனர்.
பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டால், மறுகணமே விலையை அதிகரித்து விற்பார்கள். ஆனால், பொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டால் ஒருவாரம் செல்லும் என வர்த்தகர்கள் தெரிவிப்பதாகவும் மக்கள் சாடுகின்றனர்.
சதொச உள்ளிட்ட அங்காடிகளில் சில நாள்களில் ஒரு சில மணிநேரம் புதிய விலைக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதும், தாம் சென்று கேட்டால் இன்னும் வரவில்லையென்று பதில் அளிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தனியார் கடைகளில் வெள்ளைச் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் சில கடைகளில் இல்லையென்றே சொல்லப்படுவதாகவும் கூறும் மக்கள், அரசாங்கத்தின் விலைக் குறைப்பை அனுபவிக்க முடியாதவர்களாகத் தாம் திண்டாடுவதாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, முட்டையின் விலை 17 ரூபாய் என நிர்ணயம் செய்த போதும் 22 ரூபாய்க்கும் கூடுதலாகவே விற்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

