சுவிசில் வரலாறு காணாத மக்களுடன் பேரெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016!

494 0

தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில்  தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், சுடரேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.
தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப மதிப்பளிப்பானது உறவுகளின் உணர்வுப் பகிர்வின் உறவாடலக சிறப்பாக  மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
முதற்களப்பலியான மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் வடமராட்சி மாவீரர் துயிலும் இல்லத்திலிருந்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட புனிதமண் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கடந்த கால உரைகளிலிருந்து காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2016க்கான கொள்கைவகுப்பு அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. மணியோசை, சங்கொலி, பறையொலியுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம்  18:05 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டதுடன், இளையோர்களின் இசையில் மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் இடம்பெற்றன.
சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் நாளில் எடுத்தனர்.
நிகழ்வில் தாயகம் சார்ந்த சிறப்பு வெளியீடுகள் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் கிளையினால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் அறிக்கை வாசிக்கப்பட்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளினால் சிறப்பரைகளும் வழங்கப்பட்டது. மாவீரர் காணிக்கை நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் உணர்வெழுச்சியாக இருந்ததுடன் சமகால நிகழ்வுகளைக் கருத்தியலாகக் கொண்ட ‘தொலைந்த மனிதம்’; நாடகமானது மக்களின் உணர்வுகளுக்கு மேலும் உரமேற்றியது.
‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக இனிதே நிறைவுபெற்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30