சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும்,2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்!

604 0

சுவிசில் நினைவுகூரப்பட்ட தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும்!

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதற்;களப் பலியான பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்து மாவீரர்களின் நினைவெழுச்சி நாளும், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவேந்தலும்; சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 10.10.2020 சனி அன்று நினைவுகூரப்பட்டது.

பேர்ண் பிரதான தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள திடலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுடன் முற்பகல் 11:30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வானது குறிக்கப்பட்ட இரு மணத்தியாலங்களில் நிறைவுபெற்று மீண்டும் மாலை 18:30 மணியளவில் உள்ளரங்க மண்டப நிகழ்வாக முன்னெடுக்கப்பட்டது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பில்  இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடர்கள் ஏற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து வித்தாகி வீழ்ந்த 2ம் லெப் மாலதி அவர்களின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடருக்கு மத்தியிலும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி இவ்வெழுச்சி நிகழ்வானது உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவரும் இணைந்து பாடியதனைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.