14 புதிய தொழில் நிறுவனங்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம்

251 0

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் மேலும் 14 தொழில் நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் சிறப்பு குழுக்களை அமைத்து இருந்தார். இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

இவர்கள் ஒவ்வொரு புதிய தொழில் நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதை எடுத்துக்கூறுவதுடன் தமிழகத்தில் தொழில் தொடங்கினால் அனைத்து வசதிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும் என்று உத்ரவாதம் அளித்து வருகின்றனர்.

இதனால் தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்பதை அறிந்த தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைக்க ஆர்வமுடன் வருகின்றன.

இதன் காரணமாக இந்தியாவிலேயே அதிகமான அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 42 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 30 ஆயிரத்து 664 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருந்தது.

அதுமட்டுமல்ல 67 ஆயிரத்து 612 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கும் வகையில் புதிய தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரும் மேலும் 14 தொழில் நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை 12 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறார்.

ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி, ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் நிறுவனம், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் உள்பட 14 தொழில் நிறுவனங்கள் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்கின்றன.

இதில் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படுகிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரிலும், அப்பல்லோ டயர்ஸ் ஓரகடத்திலும் அமைய உள்ளது.

மற்ற நிறுவனங்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைய உள்ளன. இந்த 14 நிறுவனங்களும் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க உள்ளதால் இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்த நிலையில் மேலும் 14 தொழில் நிறுவனங்களுடன் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. இதன் மூலம் இந்த ஆண்டு மட்டும் 56 நிறுவனங்கள் தமிழகத்துக்கு தொழில் தொடங்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.