அதிமுக எம்எல்ஏக்கள் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர கட்சி தலைமை உத்தரவு

227 0

அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கிறது. சசிகலாவும் சிறையில் இருந்து வெளிவர இருப்பதால், அ.தி.மு.க.வில் இப்போதே முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்திலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது.இந்த நிலையில், அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் 7ந்தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வர தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்தபிறகு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.