சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

174 0

சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாபய  ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சர்களுடனான சந்திப்பில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சில தேசிய பாடசாலைகள் பெயரில் மட்டுமே தேசிய பாடசாலைகளான உள்ளன.அவற்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தநிலையில் அனைத்து வசதிகளைக்கொண்ட தேசிய பாடசாலைகளை உருவாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. பாடசாலை முறையை மேம்படுத்த மாவட்ட கல்வி குழுக்களை நியமிக்க ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களும் இதன்போது முடிவு செய்தனர்.

மாகாண கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

முதலாம் வகுப்புக்காக மாணவர்களை சேர்ப்பது மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் என்பவற்றை தவிர்த்து, பாடசாலை முறையை மேம்படுத்தும் எந்தவொரு செயலிலும் அரசியல்வாதிகள் தலையிட சுதந்திரமாக உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இத்தகைய நடவடிக்கைகள் பொது நன்மைக்காகவே அன்றி, அரசியல் தலையீடாக கருதப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை பாடசாலைகளில் அனுபவம் வாய்ந்த, திறமையான ஆசிரியர்களை செயல் அதிபர்களாக நியமிப்பதற்கான சாத்தியம் குறித்தும் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.