பெருந்தோட்ட மக்களை முகவரி அற்ற சமுகமாக மாற்ற மீண்டும் சூழ்ச்சி – வேலுகுமார்

209 0

மலையகத்தில் ‘புதிய கிராமங்கள்’ என்ற எண்ணக்கருவை இல்லாதொழித்து எமது பெருந்தோட்ட மக்களை தொடர்ந்தும் முகவரியற்ற சமுகமாக முடக்கிவைப்பதற்கான சூழ்ச்சி திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட  நாடாளுமனற உறுப்பினருமான வேலுகுமார்  தெரிவித்தார்.

நல்லாட்சியின்போது   தொலுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட  லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவில் தனி வீடுகள் அமைக்கப்பட்டு, புதியதொரு கிராமம் உருவாக்கப்பட்டது. மேற்படி கிராமம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னர் மக்களிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் இறுதிக்கட்ட பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தின் உறுப்பினர்கள், குறுகிய அரசியல் நோக்கில் உட்கட்டமைப்பு வசதிகளைக்கூட ஏற்படுத்திக்கொடுக்காமல் மேற்படி வீட்டுத்திட்டத்தை முறையற்ற விதத்தில் திறந்து வைத்துள்ளனர் என்று வேலுகுமார்   விசனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ” லயன் என்ற இருட்டறைக்குள் முடங்கி முகவரி அற்றவர்களாக காணப்பட்ட எமது பெருந்தோட்ட சமுகத்தினருக்கு தனி வீடுகளை அமைத்து, புதிய கிராமங்களை உருவாக்கி லயன் யுகத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து வந்தோம்.

‘தோட்டம்’ என்பதற்கு பதிலாக ‘கிராமம்’ என்ற தூரநோக்கு சிந்தனையுடன் வீட்டுத்திட்டங்கள் திறக்கப்பட்டு பெயர்களும் சூட்டப்பட்டு கிராமத்துக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. வீடுகளுக்கு முகவரியும் வழங்கப்பட்டது.  நிர்வாகப் பணிகளும் பிரதேச செயலகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவிலும் வீட்டுத்திட்டம் எம்மால் முன்னெடுக்கப்பட்டது. உட்கட்டமைப்பு வதிசகள் மட்டுமே ஏற்படுத்திக்கொடுக்கப்படவிருந்தது. தேர்தல் அறிவிப்பால் அதனை செய்யமுடியாமல்போனது.

தற்போது ஆட்சிக்குவந்துள்ளவர்கள் பெயர் போட்டுக்கொள்வதற்காக அவசர அவசரமாக ‘சாவி கையளிப்பு விழா’ நடத்தியுள்ளனர். மனிதன் வாழ்வதற்கான அடிப்படைவதிகள்கூட ஏற்படுத்திக்கொடுக்க தவறியுள்ளனர். அதுமட்டுமல்ல புதிய கிராமம் என்ற எண்ணக்கருவும் திசைக்கப்பட்டு வீடுகளுக்கு சாவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு நிர்வாகக் கட்டமைப்பும் அங்கும் இல்லை. இது பெரும் அநீதியாகும்.

தோட்டம் என்ற நிலையில் இருந்தும் கிராமம் என்ற கட்டத்துக்குசென்று சமுகமாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கு நாம் அடித்தளமிட்டிருந்த நிலையில் அதனை தலைகீழாக மாற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயலாகும். எம்மால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை திறந்து அதிலும் பெயரை போட்டுக்கொள்ளுங்கள். அதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் செய்வதை உருப்படியாகவும், மக்கள் நலன் கருதியும் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” -என்றார்.