சாவடைந்தவர் உயிரோடு இருப்பதாக தெரிவித்து மந்திகையில் குழப்பம்!

241 0

யாழ்ப்பாணம் – நெல்லியடியில் கூலித் தொழிலாளியான இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன் தான் உள்ளார் என்று உறவினர்கள் முரண்பட்டதால் மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

நெல்லியடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருட்களை சுமக்கும் தொழிலாளியான இராஜ கிராமத்தைச் சேர்ந்த நாகராசா நரேஸ் (வயது -26) என்ற இளைஞர் இன்று மாலை தொழிலில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மயக்கமடைந்து சரிந்துள்ளார்.

உடனடியாக அவர் அம்புலன்ஸ் வண்டியில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இதன்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அனுமதிப்பிரிவு மருத்துவர் அறிக்கையிட்டார். அதனால் உயிரிழந்தவரின் சடலம் சவ அறையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உறவினர்கள், சடத்தைப் பார்வையிட்டு அவர் உயிருடன்தான் உள்ளார் என்று தெரிவித்து சடலத்தை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு கோரினர்.

இதனையடுத்து மருத்துவர்கள் மீளவும் பரிசோதனை செய்தனர். எனினும் இளைஞன் உயிரிழந்துவிட்டதை மீளவும் உறுதிப்படுத்தினர். எனினும் உறவினர்கள் மருத்துவ சேவையாளர்களுடன் முரண்பட்டதால் வைத்தியசாலையில் குழப்பநிலை காணப்பட்டது.

ஆயினும் பொலிஸாரின் வருகையை அடுத்து சுமுகநிலை ஏற்பட்டது என்று மந்திகை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர், மருத்துவர் கமலநாதன் தெரிவித்தார்.