புதிய அரசாங்கம் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துவைக்க வேண்டும்- மன்னார் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

298 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்ற நிலையில் புதிய அரசாங்கம் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துவைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நினைவு கூரப்படவுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

வடக்கில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதோடு மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் காலை 10 மணிக்கு பேரணி ஆரம்பமாகி யாழ். மாவட்டச் செயலகத்தை சென்றடையும். மாவட்டச் செயலகத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பாக மகஜர் கையளிக்கப்படும்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா தலைமையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளோம்.

குறித்த மகஜரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களின் தலைவிகளும் இணைந்து கையளிக்கவுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையும் உள்ளூர் தினத்தையும் நாங்கள் நினைவு கூர்ந்து வந்தோம்.

தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நிரந்தரமான முடிவு ஒன்றை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அதனை அன்றைய தினம் கோரிக்கையாக முன்வைக்கவுள்ளோம்.

புதிய அரசாங்கம் மக்களினுடைய பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க வேண்டும். சர்வதேசம் இவ்விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அவர்களின் உறவுகள் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக நீதிகோரி வீதியில் நிற்கின்றனர். கையில் ஒப்படைக்கப்பட்ட 210 பேரின் நிலை என்ன? அவர்களின் முழு விபரங்களும் அடங்கிய கோவையினை நாங்கள் கையளித்துள்ளோம். அதற்கான முடிவை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சிலர் பிரித்து ஆழ்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். எனவே இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றாக இணைந்து செயற்பட சகல தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.