வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் பலி!

339 0

மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் குழு மோதலாக மாறி பின்னர் பழிதீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றுபவர் என்றும் சிறந்த பணிவான குணாம்சங்கள் கொண்டவர் என்றும் விளையாட்டுப் பயிற்சி உத்தியோகத்தர் லோகிதராசா ஜயஜனனி தெரிவித்தார்.

மேலும் செங்கடி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து இந்த மாணவன் பங்குபற்றிய கூடைப்பந்தாட்ட அணி, முதற் தடவையாக கல்குடா வலய மட்ட அரை இறுதிப்போட்டி வரை சென்றது எனவும் ஜயஜனனி தெரிவித்தார்.

இதேவேளை சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.