வைரஸ் ஒரு புரளி என நினைத்து ’கொரோனா பார்ட்டி’ – நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர் பலி

217 0

கொரோனா வைரசை ஒரு புரளி என நினைத்து ’கொரோனா பார்ட்டி’ கொண்டாடிய நபர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தீவிரமடைந்த போதும் அந்நாட்டு மக்கள் பலரும் வைரசின் தீவிரத்தன்மையை உணராமல் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சுற்றித்திருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தவர்களில் சில இளைஞர்கள் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் தங்கள் நண்பர்களை அழைத்து ’கொரோனா பார்ட்டி’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை வைக்கின்றனர்.
இந்த பார்ட்டியின் நோக்கம் என்ன தெரியுமா? பார்ட்டியில் பங்குபெற்ற நபர்களில் யாருக்கெல்லாம் கொரோனா வைரஸ் பரவுகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து யார் யாரெல்லாம் குணமடைகிறார்கள் என்பது தான் இந்த பார்ட்டியின் நோக்கம்.
கோப்பு படம்
இது குறித்து, சண்டியோகோ மேத்தோடிஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜனி ஆப்பில்மை கூறியதாவது:-
வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த சிலர் கொரோனா பார்ட்டி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி அந்த பாதிப்பில்  இருந்து யாரெல்லாம் குணமடைந்து வருகிறார்கள் என்று ஒரு விளையாட்டாக செய்கிறார்கள்.
அவ்வாறு நிகழ்ச்சியில் பங்கு பெற்று வைரசால் பாதிக்கப்பட்ட டெக்சாஸ் நகரை சேர்ந்த 30 வயது வாலிபர் மருத்துவ செவிலியர்களிடம் ‘நான் தவறு செய்து விட்டேன் என நினைக்கிறேன்’ என கூறினார்.
அந்த நபர் கொரோனா வைரஸ் ஒரு புரளி என நினைத்துள்ளார். மேலும், இளைஞர்களை இந்த வைரஸ் தாக்காது எனவும் நினைத்துள்ளார். இப்படிப்பட்ட இளைஞர்களை பார்க்கும் போது அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது போன்று தெரியாது.
ஆனால் அவர்களது ஆக்சிஜன் அளவையும், ஆய்வக சோதனைகளையும் பார்க்கும்போது அவர்கள் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மை தெரியவரும். மக்கள் இந்த வைரசின் அபாயத்தன்மையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
என அவர் தெரிவித்தார்.